பாகிஸ்தானில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொடுமைப்படுத்தப்படுவதாக ஆளும் இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் இந்தியாவில் குடும்பத்துடன் வசிக்க வேண்டி அடைக்கலம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக பாரிகோட் பகுதியைச் சேர்ந்த கைபர் பக்துன் கவா தொகுதி பிடிஐ கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பல்தேவ் குமார் கூறுகையில்,
பாகிஸ்தானில் ஹிந்துக்களும், சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர். வேண்டுமென்றே பொய் வழக்குகளில் குற்றம்சாட்டுகின்றனர். பெண்கள் கட்டாயம் மதம் மாற்றப்பட்டு முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இதற்கு சமீபத்தில் நடந்த சீக்கிய பெண் மதமாற்றம் சிறந்த ஆதாரமாகும்.
பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கே அங்கு பாதுகாப்பில்லை. இஸ்லாமாபாத் ஊழலால் நிறைந்தது. அங்கு வசிக்கும் ஹிந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் சிறப்பு சலுகை அளித்தால் அவர்கள் அனைவரும் இந்தியா வர தயாராக உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரத்தில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் சிறுபான்மையினர் அங்கு தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவுக்கு குடும்பத்துடன் வந்தடைந்த பல்தேவ் குமார், நிரந்தரமாக தங்குவதற்கு அடைக்கலம் கோரியுள்ளார். 2016-ல் இவர் தொகுதி எம்எல்ஏ படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பல்தேவ் மீது போலியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2018-ல் கைது செய்யப்பட்டார்.