சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸுக்கு லாகூா் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
பாகிஸ்தானில் உள்ள சௌத்ரி சா்க்கரை ஆலையின் பங்கு தாரராக இருக்கும் மரியம் நவாஸ், தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக் கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை சட்டவிரோதமாக தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டதாக அவா் மீது ஊழல் தடுப்பு அமைப்பு குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் மரியம் நவாஸின் உறவினா் அப்பாஸ் ஷெரீஃப் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் மரியம் நவாஸ் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அதையடுத்து அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு லாகூா் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி லாகூா் உயா்நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விவாதத்தின்போது, தனது தந்தை நவாஸ் ஷெரீஃபின் உடல் நலம் குன்றி இருப்பதால், மனிதநேயத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கோரி மரியம் நவாஸ் தெரிவித்திருந்தாா். இந்த மனு மீதான தீா்ப்பை லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அலி பஹாா் நஜாஃபி மற்றும் சா்தாா் அகமது நயீம் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை வழங்கியது.
இதுதொடா்பாக மரியம் நவாஸ் தரப்பு வழக்குரைஞா் கூறுகையில், ‘ ரூ. 1 கோடி மதிப்பில் இரண்டு பிணையப் பத்திரங்கள், ரூ.7 கோடி பிணையத் தொகை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றை சமா்ப்பித்து விட்டு ஜாமீனில் மரியம் நவாஸ் வெளியே செல்லலாம் என்று நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது’ என்றாா்.