இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு தமிழக இஸ்லாமிய இயக்கத்தின் தூண்டுதலே காரணம் என அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பௌத்த துறவி கலகொட ஞானசாரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (டிஎன்டிஜே) இயக்கத்தைச் சேர்ந்த அயூப் மற்றும் அப்தீன் ஆகிய இருவர் இலங்கைக்கு வந்து இங்குள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான அப்துல் ரசீக்கை சந்தித்து பேசியுள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் விவகாரத்தில் பாதுகாப்பு படையினரை அப்துல் ரசீக் தவறான முறையில் வழிநடத்தியுள்ளார். எனவே நாம் அவரை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.
தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் சிலர் பயிற்சிகளை பெறுவதற்காக காஷ்மீர் மற்றும் கேரளாவுக்கு சென்று வந்ததாகவும், அவர்களுக்கும்சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக இலங்கை ராணுவ தளபதி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
தற்போது அதற்கு வலு சேர்க்கும் வகையில் பௌத்த துறவியும் அதே கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.