இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை அந்நாட்டு அதிபர் சிறீசேனா மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 258 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையின் வடபகுதியில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நேரிட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறீசேனா கடந்த 23ஆம் தேதி அமல்படுத்தினார். இந்த அவசர நிலையை தற்போது மேலும் ஒரு மாதத்துக்கு சிறீசேனா நீட்டித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறீசேனா பிறப்பித்துள்ள உத்தரவில், பொது மக்களின் பாதுகாப்புக்காக, அவசர நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அமலில் இருக்கும் காலத்தில், காவல்துறை, ராணுவம் ஆகியவற்றுக்கு சந்தேகப்படும் நபர்களை நீதிமன்றத்தின் அனுமதியின்றி கைது செய்யவும், விசாரணை
நடத்தவும் அதிகாரமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.