மாஸ்கோ: தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள பெரிய சிறை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 32 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து தஜிகிஸ்தான் நாட்டின் நீதித்துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தஜிகிஸ்தான் நாட்டின் துஷான்பே மாகாணத்தின் எல்லைப் பகுதியில் பெரிய சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் சுமார் 1500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஞாயிறன்று கைதிகளில் ஒரு சிறு குழுவினர் திடீரென்று அங்கு பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் மூவரை பிடித்துக் கொண்டு அவர்களை கத்தியால் தாக்கினார்கள்.
பிறகு அவர்கள் விரைந்து செயல்பட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைபட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஐந்து பேரை விடுதலை செய்தனர். அத்துடன் மேலும் ஐந்து கைதிகளையும் பயமுறுத்தும் பொருட்டு கொன்றனர்.
அதையடுத்து அங்கிருந்த சிறை மருத்துவமனைக்கு தீ வைத்த அவர்கள், சிறையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு அங்கிருந்த பணியாளர்களில் ஒரு சிறு குழுவினரை பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு எதிர் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினார்கள்.இந்த நடவடிக்கையில் 35 பேர் கைது செய்யப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டன்ர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.