கொழும்பு: இலங்கை மதராஸாக்களில் தங்கி மதப்பிரச்சாரம் செய்யும் 800 வெளிநாட்டு மதகுருக்களை வெளியேற்ற வேண்டும் என்று இலங்கை அமைச்சர் படாலி சம்பிக ரணவாகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை நீடிக்கிறது. காவல்துறையினரின் தொடர் சோதனையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்து வருகிறார்கள்.
அதேசமயம் இலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினர் அதி உஷார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இலங்கை மதராஸாக்களில் தங்கி மதப்பிரச்சாரம் செய்யும் 800 வெளிநாட்டு மதகுருக்களை வெளியேற்ற வேண்டும் என்று இலங்கை அமைச்சர் படாலி சம்பிக ரணவாகா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது
இலங்கையில் பல்வேறு மதரசாக்களில் தங்கி மத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு இஸ்லாமிய மதகுருக்கள் 800 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இவர்கள் சுற்றுலா விசாவில் வந்துவிட்டு, அதற்கு மாறாக மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை கல்வித்துறை அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் பேசுகையில், 'இலங்கை மதரஸாக்களை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.