ஹாங்காங் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது: சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் மசோதா தொடர்பாக கடந்த மாதம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வந்த மக்கள் போராட்டங்கள் சற்று தணிந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இது, நாடுகடத்தல் மசோதா சர்ச்சைக்குப் பிறகு பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்ட 7-ஆவது வார இறுதிப் போராட்டமாகும். ஹாங்காங் மக்களின் கோரிக்கைகளை அந்த நகர அரசு செவிமடுப்பதில்லை என்பதால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக பலர் தெரிவித்தனர். கடந்த முறை நடைபெற்ற போராட்டங்களில் கலவரத் தடுப்பு போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது.
போராட்டம் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு முன்னதாக, போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் இரும்பு சாலைத் தடுப்புகள் அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டன. காவல்துறை தலைமையகத்தை சுற்றிலும், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், குறைவான எண்ணிக்கையிலேயே கலவரத் தடுப்பு போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும், காவல்துறை தலைமையத்தில் அவசரகால அழைப்பை ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறையை மூடியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹாங்காங் சட்டப் பேரவைக்கு அருகிலுள்ள முக்கிய சாலை வரை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.