பாகிஸ்தானில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிலும், பெண் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலிலும் 6 போலீஸார் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ள கைபர் பக்துன்கவாவின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் இரு காவலர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் இரு காவலர்களும் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மருத்துவமனையின் நுழைவு வாயிலுக்கு பர்தா அணிந்து வந்த பெண் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் 4 போலீஸார் உள்பட 7 பேர் பலியாகினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியில் பெண் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.