ஹாங்காங்கில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்த நகரின் மூத்த குடிமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வழி செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் பொதுமக்கள் போராட்டம் தொடங்கியது.
இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலர் காயமடைந்தனர்.
சர்ச்சைக்குரிய மசோதாவை நிறுத்திவைப்பதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தும், அவர் பதவி விலக வேண்டும்; போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெரும்பாலும் இளைஞர்களே பங்கு பெறும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுமார் 2,000 மூத்த குடிமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
அப்போது, ஆயுதமின்றி போராடும் இளைஞர்கள் மீது போலீஸார் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதாக அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர்.