இந்தோனேஷியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
மலுக்கு மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
நில அதிர்வில் கட்டடங்கள் இடிந்து விழந்ததில் அவர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலுக்கு தீவு அருகே ஏற்பட்ட அந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவானது. மலுக்கு மாகாணத்தின் டேர்னேட் நகருக்கு 165 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்ததாகவும், 3,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.