வெள்ள பாதிப்பு பகுதிகளில் நோய்கள் பரவுவதை தடுப்பதற்காகவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காகவும் சர்வதேச அமைப்புகளிடம் நேபாள அரசு நிதியுதவி கோரியுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. 25 மாவட்டங்களில் 10,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
35 பேர் காணாமல் போய்விட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில், உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, நேபாள அரசு சார்பில் நிதியுதவி கோரப்பட்டது.
அதற்கு பதிலளித்த சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நேபாள அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து மருத்துவமனைகள் சார்பில் மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைக்க சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மலேரியா, டெங்கு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் பாய்ந்தோடும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.