அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு தற்காலிகத் தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனது உடல்நலக் குறைவை அடிப்படையாகக் கொண்டு ஷெரீஃப் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் தாக்கல் செய்துள்ள மனு மீது, நீதிபதிகள் ஆமிர் ஃபரூக், மோசின் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
அப்போது, நவாஸ் ஷெரீஃபின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்த அவரது வழக்குரைஞர் கவாஜா ஹாரிஸ், ஷெரீஃப் உடல்நலக் குறைவுடன் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.