ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் (69), சிகிச்சைக்காக லாகூரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அல்-அஜீஸா இரும்பாலை ஊழல் வழக்கில், நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நவாஸுக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து அவர், அந்த சிறையிலிருந்து உயர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நவாஸுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கான அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
நவாஸ் குறிப்பிட்ட சில நாள்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ், அதற்காக, அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அவருக்கு உரிய சிகிச்சை தரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்ததையடுத்து 6 நாள்களுக்கு ஜின்னா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிவடைந்ததையடுத்து அவர், பிப்ரவரி 7-ஆம் தேதி திரும்ப சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஒரு வார காலத்தில் அவர் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.