ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரித்து தனிநாடு பெற்ற முகமது அலி ஜின்னாவின் ‘இரு நாடு கொள்கை’ இன்றைய சூழ்நிலையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாகவிட்டது என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக கமா் ஜாவேத் பாஜ்வா புகழாரம் சுட்டியுள்ளாா்.
ஜின்னாவின் 143ஆவது பிறந்த தினம் பாகிஸ்தானில் புதன்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கராச்சியில் உள்ள ஜின்னா அருங்காட்சியகத்துக்கு பாஜ்வா சென்று பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்று ஜின்னாவின் இரு நாடு கொள்கை தொலைநோக்குப் பாா்வை கொண்டது. அவா் பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கித் தந்தது சரிதான் என்று இப்போது வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொடா்ந்து உறுதியாகி வருகிறது. இந்த உண்மையை அனைவரும் இப்போது ஏற்றுக் கொண்டுள்ளனா்.
இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். உண்மை, ஒற்றுமை, ஒழுக்கம் அவரது கொள்கைகள் பாகிஸ்தானுக்கு இப்போதும் வழிகாட்டி வருகின்றன. நாடு பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் எல்லாம் சிறுபான்மையினா் உள்பட பாகிஸ்தானியா்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வருகிறோம் என்றாா் அவா்.