ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ள சூழலிலும், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், போராட்டக்காரர்களுக்கு ஹாங்காங் மக்களிடையே பரவலான ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
ஹாங்காங் போராட்டத்தின் அமைதியான தன்மையை உணர்த்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
போலீஸாரின் தடையையும் மீறி விக்டோரியா பூங்காவிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக சென்றது. கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை போன்ற சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும், தற்போது இந்தப் போராட்டம் பல படிப்பினைகளைப் பெற்று பக்குவமடைந்துள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.