ஆப்கன் திருமண நிகழ்ச்சியில்  தற்கொலைத் தாக்குதல்: 63 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்தனர்.
தற்கொலை குண்டுவெடிப்பில் உருக்குலைந்த திருமண மண்டபத்தின் மேற்கூரை.
தற்கொலை குண்டுவெடிப்பில் உருக்குலைந்த திருமண மண்டபத்தின் மேற்கூரை.

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஆப்கன் தலைநகர் காபூலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில், சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஷியா பிரிவினரின் அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு சுமார் 1,200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்துக் கொண்டிருந்த போது, அந்தக் கூட்டத்தினரிடையே இருந்த பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அங்கிருந்த 63 பேர் உடல் சிதறியும், குண்டு துகள்கள் பாய்ந்தும் உயிரிழந்தனர்; 182 பேர் காயமடைந்தனர்.

ஐ.எஸ். பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. ஷியா பிரிவினர் பங்கேற்றதால் அந்த நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள சுமார் 1,200 அமெரிக்க வீரர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சூழலில், அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதில் அந்த நாட்டு அரசுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் சிக்கல் நீடித்து வருவதை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com