கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 62 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் கவிழ்ந்த அந்த லாரியிலிருந்து வழிந்து கொண்டிருந்த பெட்ரோலை ஏராளமானவர்கள் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மோரோகோரோ நகர் அருகே சனிக்கிழமை சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி, நிலைதடுமாறி கவிழ்ந்தது. அதையடுத்து, அந்த லாரியிலிருந்து பெட்ரோல் கசியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், வழிந்துகொண்டிருந்த பெட்ரோலைப் பிடிப்பதற்காக அங்கு கூடினர். அப்போது அந்த லாரி பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 57 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; சுமார் 70 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த போது யாரோ ஒருவர் சிகரெட் பற்ற வைத்ததால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் எரிபொருள் வாகனங்கள் மற்றும் குழாய்களில் வெடிவிபத்து ஏற்பட்டு, அங்கு எரிபொருள் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 2010-ஆம் ஆண்டு நேரிட்ட இதேபோன்றதொரு விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர். தெற்கு சூடானில் கடந்த 2015-ஆம் ஆண்டு நேரிட்ட மற்றொரு விபத்தில் 203 பேர் பலியாகினர்.