பாகிஸ்தானின் நிதி அமைச்சராக இருந்த அஸாத் உமர் வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நிதியம் நிதி உதவி அளிப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து இறுதி செய்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த அஸாத் உமர் அண்மையில்தான் நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், அவர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸாத் உமர் கூறும்போது: பிரதமர் இம்ரான்கான், அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, தற்போது நிதி அமைச்சராக இருக்கும் நான் எரிசக்தி துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இம்ரானின் விருப்பம். அதன் காரணமாகவே, நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன் என்றார் அவர். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி பிரச்னையை அஸாத் உமர் முறையாக கையாளவில்லை என்று வர்த்தக சமூகத்தினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால், இம்ரான் கான் தலைமையிலான அரசு எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்து வந்தது. இந்த நிலையில், நிதி அமைச்சகத்தில் பல மாறுதல்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் திங்கள்கிழமையே செய்திகளை வெளியிட்டிருந்தன. தற்போது, அது உண்மையாகியுள்ளது.
இருப்பினும், அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபவத் சௌத்ரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் பிரதமருக்கு உரியது. ஊடகங்கள் அதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றார் அவர்.