ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியில் மட்டும் எபோலா பாதிப்பு காரணமாக 600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஐநா பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெஃபனி துஜாரிக் கூறுகையில்,
ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியில் எபோலா பாதிப்பு காரணமாக 629 பேர் உயிரிழந்துள்ளனர். 1,041 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் தடுப்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை எபோலா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதால் நோய் பரவுவது வெகுவாக குறைந்துள்ளது. எபோலா நோய் தொற்று தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு 76,425 பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல ஆயிரம் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இந்நோய் பரவுவதால் மீட்பு நடவடிக்கைகளில் சவால் நிறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் எபோலா நோய் தொற்று அதிகளவில் பரவியதன் காரணத்தால் அதன் பாதிப்பால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.