கலிபோர்னியா: உலகின் பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் இருபது வயதை எட்டி உள்ள நிலையில், இனி தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் வரவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பிரபல தேடு பொறி நிறுவனம் கூகுள். இது 04.09.1998 அன்று லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு நண்பர்களால் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இணைய உலகின் மிகவும் பிரபலமான தேடுபொறி நிறுவனமாக இதுவே விளங்கி வருகிறது.
இந்நிலையில் இருபது வயதை எட்டி உள்ள நிலையில், இனி கூகுளின் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் வரவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப இணையதளமான 'மஷாபிள்' வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:
முன்பு போலவே இனியும் கூகுளின் தேடல் முடிவுகள் தொடர்ந்து வெளிவரும். அனால் அவை காண்பிக்கப்படும் முறையில் மாற்றம் வரவுள்ளது. சமூக வலை தள நிறுவனங்கள் போல இனி தேடல் முடிவுகளில் நியூஸ் பீட்கள், செங்குத்து வடிவ விடியோக்கள், புகைப்படங்களுடன் இணைந்த தகவல்கள் மற்றும் நிறைய கதைச் செய்திகள் ஆகியன காண்பிக்கப்படும்,
அத்துடன் தனிப்பட்ட பயனாளர்களின் தேடுதல் விபரங்களின் தொகுப்பு மற்றும் விருப்பத் தேர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து 'டிஸ்கவர்' என்னும் பிரத்யேக பீட் இணைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.