வெள்ளிமணி

கேட்ட பலன் தரும் சப்த சிவத்தலங்கள்

இரா. இரகுநாதன்

மயிலையே கயிலை என்பது வாக்கு .  சென்னை மயிலாப்பூர் சைவ சமயத்தின் வாழ்விடங்களில் ஒன்று.  கடற்கரையை ஒட்டியிருந்த மயிலையை 16 }ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர்கள் இன்றைய இடத்துக்கு நகர்த்தினர் என்பது வரலாறு.

மயிலையில் கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர்,  வாலீஸ்வரர், விருப்பாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 புராதனமான சிவத்தலங்கள் அமைந்துள்ளன.  இவற்றில் சப்த ரிஷிகளான விசுவாமித்திரர், காசியபர், வசிஷ்டர், கெüதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

ஒரே நாளில் இவர்களை தரிசிக்க, நற்பலன்கள் கிடைக்கும். 4 கால பூஜைகள் நிகழும் மகாசிவராத்திரியன்று வழிபட சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்.  18-இல் வருகிறது.

கபாலீஸ்வரர் கோயில்:  கயிலையில் சிவன் உமைக்கு வேதப் பொருளை விளக்கிய வேளையில் அழகு மயில் தோகை விரித்து ஆடியது.  உமையின் சிந்தை செல்ல சிவன் சினம் கொண்டு மயிலாய்ப் பிறந்து எம்மை பூசிப்பாயென அருளினார். உமை மயில் உருவம் கொண்டு இத்தலத்தை அடைந்து புன்னை மரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்த ஈசனை அங்கிருந்த பொய்கையில் நீராடி, அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்து வந்து அர்ப்பணித்து துதித்தாள்.  குறித்த காலத்தில் சிவன் அன்னைக்குக் காட்சி தர சுய உருப்பெற்றாள். மயிலாய் உமை பூசித்த தலமாதலால் மயிலாப்பூர் ஆயிற்று.  அம்மையும் அப்பனுமாய் அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். பூம்பாவையை உயிர்ப்பித்த 7}ஆம் நூற்றாண்டு முதல் நிலைத்திருக்கும் கோயில்.

வெள்ளீஸ்வரர் கோயில்:  கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே  உள்ளது. விநாயகர் , சரபேஸ்வரர், சனி பகவானுடன்  காமாட்சி உடனுறை வெள்ளீஸ்வரர் எழுந்தருளியுள்ளார் . வாமனனுக்கு மகாபலி தானம் கொடுக்க முயன்றபோது,  வெள்ளியான அசுர குரு சுக்ராசாரியார் வண்டாக மாறி நீர்ப்பாதையை அடைக்க, திருமால் தர்பைப் புல்லினால் குத்த சுக்கிரனுக்கு ஒரு கண் பறிபோனது. கண்ணைத் திரும்ப பெற மயிலை வந்து இங்கு இறைவனை வழிபட்டு கண் பெற்றார். வெள்ளியாகிய சுக்கிரன் பூஜை செய்ததால் வெள்ளீஸ்வரராக வணங்கப்படுகிறார்.

மல்லீஸ்வரர் கோயில்: மரகதாம்பிகையுடன் அருளும் மல்லீஸ்வரர் கோயில் மயிலை பஜார் சாலையில் இறுதியில்  உள்ள தெருவின் முடிவில் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் மல்லிகை வனமாக  இருந்த தோட்டத்தின் உள்ளாக மல்லிகைச் செடிகளுக்கு நடுவே சுயம்புவாய் அமைந்து மல்லிகை மணத்துடன் காட்சி அளித்ததால் மல்லீஸ்வரர் எனப்பட்டார்  என்று வரலாறு கூறுகிறது.  மாசி மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள,  சிவனின் மீது நேரடியாக விழுந்து சூரியபூஜை செய்யும் அற்புதத் தலம். குடும்ப நலன்,  உறவுகள் அகலாமல் இருத்தல் , திருமணம் கைகூடல் போன்றவை நிறைவேறும் தலம்.

விருப்பாட்சீஸ்வரர் கோயில்: மல்லீஸ்வரர் கோயிலின் அருகிலேயே உள்ளது. பசுவும் கன்றும் சேர்ந்து பூஜை செய்ததாகவும் அதனைக் கண்ட பக்தர் கோயிலை எழுப்பியதாகவும் வரலாறு உள்ளது.  பக்தர்களின் விருப்பம் நிறைவடைவதால் விருப்பத்தை நிவர்த்தி செய்யும் விருபாட்சீஸ்வரர் என்று பக்தர்களால் அழைத்து வணங்கப்படுகிறார். தவம் கலைத்த மன்மதனை நெற்றிக்கண் திறந்து எரித்த சிவன் இத்தலத்தில் முக்கண்ணனாகக் காட்சி அளிக்கிறார்.  அம்பாள் சந்நிதி அருகே எழுந்தருளியுள்ள கால பைரவரை பக்தர்கள் திருமணத் தடை நீக்குவதற்கும், குழந்தை செல்வத்துக்காகவும் வணங்கி வழிபடுகிறன்றனர்.

காரணீஸ்வரர் கோயில்: நாடி வரும் பக்தர்களுக்கு பொன்னும் பொருளும் வாரி வழங்குவதாலும், உலக இயக்கத்துக்குக் காரணமாகவும் அமைந்துள்ளதால் பொற்கொடி அம்பாள் உடனுறை காரணீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.  இங்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்,  விளக்கெண்ணெயை  சம அளவில் கலந்து விளக்கு ஏற்றி இறைவனை வலம் வந்து வழிபட்டால் குறைகள் தீர்ந்து நலம் பெறலாம். வானொலி நிலையத்தின் அருகில் உள்ள சாலை வழியாக சென்றால் பஜார் ரோடு சேருமிடத்தில் அமைந்துள்ள கோயிலாகும்.

வாலீஸ்வரர் கோயில்: கோலவிழியம்மன் கோயிலின் அருகில் பெரிய நாயகி அம்பாள் உடனுறை வாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வாலி கோயிலில் பூஜை செய்து இறையருள் பெற்ற திருத்தலம் வாலீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. காசிக்கு நிகரான பஞ்சபூதங்களுக்கு ஒப்பாக,  பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ளன. மகா சிவராத்திரியன்று  பஞ்சலிங்கங்களை தரிசிப்பது சிறப்புடையது.

தீர்த்தபாலீஸ்வரர் கோயில்: டாக்டர் நடேசன் சாலையிலுள்ள இந்தக் கோயிலைச் சுற்றிலும் 64 தீர்த்தக் குளங்கள் இருந்ததாகவும், கோயிலுக்கு சற்று தொலைவில் கடல் இருப்பதாலும் தீர்த்தங்களை பரிபாலனம் செய்யும் ஈஸ்வரர் தீர்த்தபாலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். அகத்தியர் தனது நோய் நீங்கிட வேண்ட தீர்த்தத்தைக் கொடுத்து நோயை நீக்கியதால் இங்கு உறையும் ஈஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் எனப்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT