நினைத்த காரியங்கள் கை கூடவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் அனைத்து செல்வங்களை அடையவும் இறைவனை நினைத்து உறுதி செய்வதற்கே "விரதம்' என்று பெயர்.
அனுபவத்தின் அடிப்படையில், வழிகாட்டப்பட்ட வேதங்கள், புராணங்களில் உள்ளபடி, பல்வேறு விரதங்களை உருவாக்கிக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் உபாயங்களையும் அறிவுறுத்தியுள்ளனர் முன்னோர்கள்.
அதில் ஒன்றுதான் "சந்தான கோபால விரதம்'. இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் பெüர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி, மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாண்டு அக். 9 ( ஞாயிற்றுக்கிழமை) அமைகிறது.
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவறிந்த மக்கள்பேறு அல்ல பிற' என்று இல்லற வாழ்வினர் பெற வேண்டிய பேறுகளில் குழந்தைச் செல்வத்தைதான் சிறப்பாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை.
பதினாறு செல்வங்கள் மக்கட்செல்வமும் ஒன்று. வேத ஆசிர்வாத மந்திரங்களும், தான்யம், தனம், பசும், பஹுபுத்ரலாபம்' என்றே கூறுகின்றது.
சந்தான கோபால விரதத்தை முழுமையாகப் பின்பற்ற முடியாத நிலையில், பிரத்யேகமாக சில ஆலயங்களுக்குச் செல்லுமாறும், அங்குள்ள சந்தான கோபாலனை வழிபடுமாறும் நடைபெறும் பாராயணங்களில் பங்கேற்குமாறும் தம்பதிகளுக்கு ஆன்மிகம் வழிகாட்டுகிறது.
சக்தி வாய்ந்த அத்திருத்தலங்களில் ஒன்றுதான் மேல்வெண்பாக்கம் ஸ்ரீஸ்வதந்த்ரலட்சுமீ நாயிகா சமேத ஸ்ரீயுகநாராயணப் பெருமாள் கோயில்.
தலமான்மியம்: மேல் வெண்பாக்கம் திருச்சந்நிதி நான்கு யுகங்கள் பழைமையானது. சாளக்ராமத் திருமேனியாக, சுயம்புவாக, தாயாரும், பெருமாளும், சதுர்யுகங்களாய் அருளாட்சி செய்யும் மகிமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
மலர்ந்த புன்னகையுடன், அகன்ற திருமார்பினனாய், பிராட்டியை தனது இடது மடியிலே அமர்த்தி அவளை அணைத்த வண்ணம் ஒரே நேர்கோட்டில் ஒட்டியபடி ஸமபலத்துடன் ஐக்கிய பாவத்தில் ஆதிசேஷன் மார்பில் அணிகலனாய் இருக்க திருச்சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயார், பெருமாள் பீடத்துக்கு நேர் கீழே ஒரு மாபெரும் சித்த புருஷர் அஷ்டமா சித்திகள் புடை சூழ அமர்ந்து தவம் செய்வதாகவும், அதிகாலையில் பெருமாள், தாயாருக்கு ஆராதனை செய்து வழிபடுவதாகவும் ஐதீகம்.
சுந்தர விநாயகர், திருமாலுடன் தொடர்புடைய பல சந்நிதிகளும், ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள் சந்நிதிகளும் கோயிலில் அமையப் பெற்று தெய்வீக சான்னித்யம் நிறைந்துள்ளது.
இத்தலம் தாயாரின் வாசஸ்தலமாக விளங்குவதால், கோ சாலை ஒன்றும் பிரதான சந்நிதிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. கருவறையில் பெருமாளுடன் சந்தான கோபாலகிருஷ்ண விக்ரகமும் வழிபாட்டில்உள்ளது.
பலன்கள்: வெள்ளிக்கிழமைகள், உத்திராடநட்சத்திர நாள்களில் நடைபெறும் வைபவங்களில் தொடர்ந்துவழிபட்டுவந்தால், தம்பதிகளுக்கிடையே பரஸ்பரம் நல்லஅன்பும், பரஸ்பரமும் ஏற்பட்டு, குழந்தைப் பேறு கிடைக்கப் பெறுவர்.
பாராயணங்களின் சிறப்பு: சந்தான பாக்கியத்துக்கும் மகாலட்சுமி கடாட்சத்துக்கும் உகந்த மந்திரங்கள் அடங்கிய "ஸ்ரீலட்சுமி நாராயண ஹ்ருதயம்', பகவான் கிருஷ்ணனே திருவாய் மலர்ந்தருளுவதாக ஸ்ரீமந் நிகழாந்த தேசிகன் அருளிச் செய்த "யாதவாப்யுதயம்' மகா காவ்யத்தில் காணப்படும் "கோவர்தனகிரி மஹாத்மியம்', பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர் அருளிச் செய்த ஸ்ரீசந்தான கோபால ஸ்தோத்திரம் ஆகிய மூன்றும் இத்தலத்தில் பெருமாள் சந்நிதியில் பாராயணம் செய்யப்படுகிறது. இதை கேட்பவர்களுக்கு சந்தான பிராப்தி
கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது.
மகா சுவாமிகள் விஜயம்: காஞ்சி மகா சுவாமிகள் 1957}இல் இத்தலத்துக்கு விஜயம் செய்து மூன்று நாள்கள் வழிபட்டுள்ளனர். மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர சுவாமிகள் உள்பட பல ஆன்மிகப் பெரியோர்கள் இங்கு தரிசித்துள்ளனர்.
இருப்பிடம்: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகேயுள்ள மேல்வெண்பாக்கம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்னை} பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்து பாலுசெட்டிசத்திரம், தாமல்தாண்டி பனப்பாக்கம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும்.
தொடர்புக்கு: 9003177722, 9383145661.
-எஸ்.வெங்கட்ராமன்