வெள்ளிமணி

தடைகள் விலகப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (ஜன.21-27)

DIN

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்த இந்த வாரப் பலன்கள் (ஜனவரி 21 - 27).

ஜனவரி 21 - 27

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெரியோர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நேரமிது. எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய மனை, வீடு வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடல் நலத்திலும் அக்கறை செலுத்தவும். 

உத்தியோகஸ்தர்கள் திறமைக்கு ஏற்ற புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். கடின உழைப்பால் லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகி லாபம் உயரும். நிலுவையில் இருந்த பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த இழுபறி நிலைமை மாறும். விவேகமான செயல்பாடுகள் மூலம் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் ஒப்பந்தங்களை விரைந்து முடித்துக் கொடுப்பீர்கள். பயணங்கள் அனுகூலமாக அமையும். பெண்மணிகள் குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மாணவமணிகள் பெற்றோர் பேச்சை மதித்து நடக்கவும். உடல்நலம் பேண யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 22. 

சந்திராஷ்டமம்: 27. 


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் திறமைகள் வெளிப்படும் நேரமிது. மனதளவிலும் உடல் நிலையிலும் புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். மற்றவர்களின் உதவிகள் தானாகவே கிடைக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறப்பிடம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் தேவைக்கேற்ப பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டி பொறாமைகள் மறையும். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் கிடைத்து விளைச்சல் அதிகரிக்கும். கால்நடைகளால் அதிக லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் செல்வாக்கு அதிகமாகும். கலைத்துறையினர் திறமைக்கு ஏற்ப புதுப்புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். புகழ் உயரும். சக கலைஞர்களுடன் சுமூகமான நட்புடன் இருப்பீர்கள். 

பெண்மணிகள் குடும்ப சூழ்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். சோம்பேறித்தனத்தை அறவே விட்டொழித்து அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள்.

பரிகாரம்: மகான்களின் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 21, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை.


மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்கள் அனைத்தையும் புத்தி சாதுர்யத்துடன் செய்து முடிக்கும் நேரமிது. பேச்சுத் திறன் கூடும். சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களிடம் நட்பும் அதனால் பயனும் உண்டாகும். பொருளாதார நிலை சற்று உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகும். கவனம் தேவை. பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்குவதை சற்று தள்ளிப் போடவும். போட்டியாளர்கள் உங்களிடம் இணக்கமாக நடப்பார்கள். விவசாயிகள் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். பொருளாதாரம் சீரடையும். கால்நடைகளால் அதிகலாபம் 
பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சிலருடன் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து சாதனை படைப்பீர்கள். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாக செயல்படுங்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதிற்கினிய சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாணவமணிகள் விளையாட்டில் வெற்றி வாகை சூடுவார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் நேரமிது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்களின் கோபத்தைச் சற்று குறைத்துக் கொள்ளுங்கள். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும்.  
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் நட்பு உங்கள் பணிச்சுமையை குறைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். 

வியாபாரிகள் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். வெளியூரிலிருந்து பண உதவி, பொருளுதவி கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். நீர்ப் பாசன வசதிக்கும் கால்நடைகளுக்கும் அதிக செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அவசியமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியை காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோர் பேச்சை மதித்து நடக்கவும். விளையாட்டில் கவனமாக ஈடுபடவும். கடின உழைப்பால் மதிப்பெண்கள் உயரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி கூடும் நேரமிது. உங்களின் செயல்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். எவரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கல் உள்ளிட்ட விஷயங்கள் சிறப்பாகவே இருக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெறுவதற்கு முயற்சி எடுப்பீர்கள். விவசாய பணியாளர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மாற்றுக் கட்சியினரிடமும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். புதுப்புது நட்புகள் உருவாகும். பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். 

பெண்மணிகள் வீடு வாகனம் நிலம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கினிய செய்திகள் கேட்பீர்கள். மாணவமணிகளுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் செலுத்தி மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் குடும்பத்தில் கலகலப்பும் சந்தோஷமும் நிலவும் நேரமிது. பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பயணங்களில் கவனமாக இருக்கவும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நல்ல அபிப்பிராயம் பெறுவீர்கள். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயிகள் உப தொழில்களில் சிறிது கவனம் செலுத்தவும். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பயன்பெறலாம். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். கர்வத்தை விட்டொழித்தால் புகழ் உயரும். 

பெண்மணிகள் உடன் பிறந்தவர்களிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு அனைவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: பெருமாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.


துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் வேலைகளில் இருந்த தடை விலகி உற்சாகத்துடன் செயல்படும் நேரமிது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவீர்கள். தொல்லை கொடுத்துவந்த சக ஊழியர்கள் அடங்கிப் போய்விடுவார்கள். வியாபாரிகள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு விற்பனையில் கவனம் செலுத்தவும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து லாபத்தை அள்ளலாம். மகசூல் உயரும். நீர்ப்பாசன வசதி அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். கட்சி மேலிடத்திடம் பேசும்பொழுது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அனைத்து செயல்களிலும் இருந்த பதட்டம் விலகும். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். 

பெண்மணிகள் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் போது கவனம் தேவை. கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீபழனி ஆண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் நேரமிது. அவர்களிடம் இருந்து வந்த பிணக்குகளும் கருத்து வேறுபாடுகளும் விலகும். பேச்சில் கவனம் தேவை.  மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடாதீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் பழகவும். பணிச்சுமையால் பயணம், அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகள் புதுப் புது யுக்திகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகள் குறைந்து விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் குறைந்த செலவில் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு நன்மை அடைவீர்கள். மனதில் இருந்த கவலை நீங்கும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்திடம் உங்கள் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தொண்டர்கள் ஆதரவு குறையாது. கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். பொறுமையுடன் செயலாற்றி வெற்றிகளைக் காண்பீர்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உள்ளவர்களின் மீது பற்றும் பாசமும் அதிகரிக்கும். கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். 

பரிகாரம்: சிவன் பார்வதியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார முன்னேற்றத்தில் இருந்துவந்த தடைகள் விலகும் நேரமிது. பணப்புழக்கம் சீராகும். உங்கள் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். கோபத்தைக் குறைக்கவும். உங்கள் பேச்சாற்றலை மற்றவர்கள் பாராட்டுவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் பேசுகையில் மிகுந்த கவனம் தேவை. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய சந்தைகளுக்கு சென்று விற்பனையை பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள். கால்நடைகளாலும் லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். கலைத்துறையினருக்கு மந்த நிலை மாறி செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். 

பெண்மணிகள் குடும்பத்தை திறம்பட நடத்தி உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கணவருடன் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.


மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களிடம் இருந்த உயர்ந்த பண்புகள் வெளிப்படும் நேரமிது. உங்களின் பெருந்தன்மையான குணநலன்களை அனைவரும் பாராட்டுவார்கள். பொருளாதார நிலை சற்று உயரும். உங்கள் கெüரவம் மேலோங்கும். 

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் சாதகமாக நிறைவேறும். சக ஊழியர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் தனிப்பட்ட ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி அடைவீர்கள். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். கால்நடைகளின் மீது தனி கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகள் எதிர்பாராத வகையில் பணம், பொருள் வந்து சேரும். பிடிவாத குணத்தை விடுத்து திறந்த மனதுடன் செயலாற்றுவீர்கள். கலைத்துறையினரு உங்கள் திறமைகளைக் குறைத்து எடை போட்டவர்கள் வருந்தும் சூழல் உருவாகும். சக கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் பிறர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். கணவருடனான ஒற்றுமை மேம்படும். பொருளாதார அபிவிருத்தி காண்பீர்கள். மாணவமணிகள் சக மாணவர்களுடன் ஒற்றுமையாக பழகவும். பெற்றோர் பேச்சை தட்டாதீர்கள்.

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 27. 

சந்திராஷ்டமம்: 21, 22.


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும் நேரமிது. எல்லோரிடமும் கலகலப்பாக பழகி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகும். வியாபாரிகள் சில  தடைகளைத் தாண்டி பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். நிலைமையை சாதுர்யமாக சமாளித்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக முடியும். புதிய குத்தகை முயற்சியில் இப்போது இறங்க வேண்டாம். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு தேவையில்லாத கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு பயணங்களால் நன்மை உண்டாகும். விருதுகள் பாராட்டுகள் கிடைக்கும். 

பெண்மணிகள் மனதிலிருந்த விரக்தி விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவருடன் ஒற்றுமை மேம்படும். குடும்பத்தினரின் பாராட்டுகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகளுக்கு வருங்கால கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். விளையாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை வழிபாடு உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 25, 27. 

சந்திராஷ்டமம்: 23, 24.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் உருவாகும் நேரமிது. அவர்களின் நட்பினால் தகுந்த ஆதாயமடைவீர்கள். சகோதர, சகோதரி வழியில் சுமுகமான உறவு ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றி நிச்சயம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் கொடுக்காதீர்கள். வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். விவசாயிகள் புதிய சந்தைகளில் தானியங்களை விற்று லாபம் அடைவீர்கள். கால்நடைகளால் சற்று செலவு உண்டாகும். 

அரசியல்வாதிகள் திட்டங்களில் வெற்றி அடைய தொண்டர்களின் பங்கு உதவியாக இருக்கும். உங்கள் பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகள் பெரியோர்களை மதித்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும். அதிகாலையில் எழுந்து படித்தால் வெற்றி நிச்சயம். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 27. 

சந்திராஷ்டமம்: 25, 26.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT