இவ்வாண்டு செப். 21-ஆம் தேதி (பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமையன்று) ஆரம்பமாகும் மகாளய பக்ஷத்திலிருந்து தொடர்ந்து பதினைந்து நாள்கள் செய்யும் தர்ப்பணத்திற்குக் கிடைக்கும் பலன்களாகப் பெரியோர்களால் கூறப்பட்டுள்ளவை கீழ்வருமாறு:
முதல் நாள் பிரதமையில் தர்ப்பணம் செய்தால் பணம் சேரும். இரண்டாம் நாள் துவிதியையில் தர்ப்பணம் செய்தால் நன்மக்கட்பேறு கிட்டும். மூன்றாம் நாள் திருதியையில் தர்ப்பணம் செய்தால் நினைத்தது நிறைவேறும்.
நான்காம் நாள் சதுர்த்தியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்படுவர். ஐந்தாம் நாள் பஞ்சமியில் தர்ப்பணம் செய்தால் கைவிட்டுப் போன பொருள்கள் / சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.
ஆறாம் நாள் சஷ்டியில் தர்ப்பணம் செய்தால் புகழ் கிடைக்கும். ஏழாம் நாள் சப்தமியில் தர்ப்பணம் செய்தால் உத்தியோக உயர்வு, பெருமைகள் உண்டாகும். எட்டாம் நாள் அஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சமயோஜித புத்தியும், அறிவாற்றலும் வாய்க்கப் பெறுவர்.
ஒன்பதாம் நாள் நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமணத்தடை நீங்கும்; சிறந்த வாழ்க்கைத்துணை அமையும்; நல்ல மருமக்கள், பெண் மகப்பேறு வாய்க்கப் பெறுவர்.
பத்தாம் நாள் தசமியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாளைய விருப்பங்கள் நிறைவேறும்.
பதினோறாம் நாள் ஏகாதசியில் தர்ப்பணம் செய்தால் சகல கலைகளிலும் தேர்ச்சியடைவர். பன்னிரண்டாம் நாள் துவாதசியில் தர்ப்பணம் செய்தால் ஆடை, ஆபரணங்கள் சேரும். பதிமூன்றாம் நாள் திரயோதசியில் தர்ப்பணம் செய்தால் விவசாயம் செழிக்கும், தீர்க்காயுள் கிடைக்கும். பதினான்காம் நாள் சதுர்த்தசியில் தர்ப்பணம் செய்தால் பாவங்கள் நீங்கும், சந்ததி மேன்மையுடன் விளங்கும்.
பதினைந்தாம் நாள் அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் மேற்கண்ட அத்தனை பலன்களும் கிடைக்க நம் முன்னோர்கள் ஆசிகளை வழங்குவர்.