ஜென்ம லக்னத்திற்கு எட்டாம் பாவத்தை ஆயுள் பாவம் என்றும், எட்டாவது பாவாதிபதியை ஆயுள் பாவாதிபதி எனவும் ஜோதிட கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ சத்தியாச்சாரியார் தனது கிரந்தமாகிய "சத்தியாச்சாரியம்' என்னும் நூலில், ஒரு ஜாதகரின் ஆயுள் பாவ கணிதத்தைப் பற்றி விரிவாக உரைக்கும் போது, அந்த ஜாதகரின் ஜென்ம லக்னத்தையோ அல்லது சந்திர லக்னத்தையோ, சுப கிரகங்களில் எவரேனும் ஒருவரோ அல்லது பலரோ பார்த்திருப்பார்களேயானாலும், ஜென்ம லக்னாதிபதியும், சந்திராதிபதியும் ஷட் வர்க்கம் மற்றும் இதர ரீதியிலும் பூரண பலம் பெற்று காணப்பட்டாலும் அந்த ஜாதகருக்கு பரிபூரண ஆயுளும், ஆயுள் உள்ளவரை திடகாத்திரமான உடலமைப்பும், ஆரோக்கிய வாழ்வும், விருத்தியும் உண்டாகும் என்று கூறியுள்ளார்.
லக்னாதிபதி தனது ஆரோகண கதியில் உச்ச வீட்டை நோக்கி சஞ்சரிப்பதும், சுப கிரகங்களுடன் கூடி இருப்பதும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
நவாம்ச லக்னம், வர்கோத்தமமாக (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமைந்திருப்பதும், வர்கோத்தம லக்னம் சுப தன்மை வாய்ந்தது எனவும் "பலதீபிகை' போன்ற கிரந்த நூல்கள் கூறுவதாலும், நவாம்ச லக்னத்தில் சுப கிரகம் வீற்றிருப்பதும், மற்றொரு சுப கிரகம் நவாம்ச லக்னத்தைப் பார்த்திருப்பதும் பரிபூரண ஆயுள், அபிவிருத்தி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும் எனக் கூறலாம்.
ஸ்ரீ காளிதாசர் தனது கிரந்தமாகிய "ஜாதக சந்திரிகை' என்னும் நூலில் ஒரு ஜாதகரின் ஆயுள் நிர்ணய தசையைப் பற்றி விமர்சனம் செய்யும்போது, சர லக்னங்களுக்கு 2, 7 -க்குடையவர்கள், சட்டபூர்வமான மாரகாதிபதிகள் என்றும், 22-ஆவது திரேக்காணாதிபதி விசேஷமான மாரக அதிகாரம் படைத்தவர் என்றும் கூறியுள்ளார்.