வெள்ளிமணி

கிரகண நேரத்திலும் திறந்திருக்கும் அதிசய கோயில்!

ஆர்.விஜயலட்சுமி

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில்தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில். கிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் ஒன்று உண்டென்றால் கோட்டயம் அருகில் உள்ள திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்தான் அது.

எல்லா இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் சூரிய, சந்திர கிரகணம் என்றால் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டு, கோயிலைத் தூய்மைப் படுத்தி, சிறப்புப் பூஜைகள் செய்த பின்னரே நடை திறக்கப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டுக்கு விடுவது வழக்கம்.

திருப்பதி போன்ற சில கோயில்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நள்ளிரவில் கூட தரிசிக்கலாம். ஆனால், திருப்பதி கோயிலில் கூட ஒரு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மூடப்பட்டு, வைகறையில் திறக்கப்படும். 

ஆனால் கேரளாவில் உள்ள திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, எல்லா நாள்களிலும், எல்லா நேரமும் கோயில் திறந்திருக்கக்கூடிய அதிசயக் கோயிலாக விளங்குவதுதான் வியப்பு! 

திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் 1500 வருடங்கள் பழைமையானது. இந்தக் கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் எப்பொழுதும் பசியோடு இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோயில்களைப் போல் அல்லாமல், ஆண்டின் எல்லா நாள்களும், பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

சம்பிரதாயத்திற்காகக் கோயில் கதவு நள்ளிரவு 11.58 மணி முதல் 12 மணி வரை, வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகிறது!

கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை. நள்ளிரவு 11.58 மணிக்கு கோயில் 2 நிமிடம் மூடப்படுவதற்கு முன்னர் அங்குள்ள தந்திரி, ""இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா?'' என சப்தமாகக் கேட்பார்.

அதேபோல் இங்கு பிரசாதம் வழங்கும்போது அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.

கிருஷ்ணரின் பிரசாதத்தை உண்டால், அதன் பின்னர் பக்தர்கள் பசியால் எப்போதும் வாட மாட்டார்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உணவுப் பிரச்னை வராது என்பதும்  ஐதீகம்.

கையில் கோடரி: இக்கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடரி ஏந்திய படி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும், தந்திரியின் கையில் கோடரி கொடுக்கப்படும்.

"இங்குள்ள கிருஷ்ணர் பசியைத் தாங்கிக் கொள்ள மாட்டார்' என்பதால், ஒருவேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு, கோயில் கதவைத் திறப்பதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கதவை உடைப்பதற்காக அதைப் பயன்படுத்தலாம் என்பதற்காக அந்தக் கோடரி கையில் கொடுக்கப்படுகிறதாம்.

பசி தாங்காத கிருஷ்ணர்: திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட இந்து கோயில்கள் அனைத்தும் சூரிய, சந்திர கிரகண நேரங்களில் மூடப்படுவது வழக்கம். ஆனால், திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மட்டும் கிரகணத்தின்போது கூட மூடப்படுவதில்லை. 

ஒருமுறை கிரகண நேரத்தில் கோயில் மூடப்பட்டது. கிரகணம் முடிந்து கோயிலைத் திறந்தபோது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை (ஆபரணம்) கீழே விழுந்திருப்பதைக் கண்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஆதிசங்கரர், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருந்ததால் இப்படி நடந்திருப்பதாகக் கூறினாராம்.

அப்போதிலிருந்து, கிரகண நேரத்திலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. 24 மணி நேரமும் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. ஜூன் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) நிகழ்ந்த சூரிய கிரகணத்தன்றும் கோயில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அரக்கன் கம்சனைக் கொன்ற கிருஷ்ணர் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்தக் கிருஷ்ணரே இந்தக் கோயிலில் மூலவராக அமர்ந்துள்ளார். தினமும் கிருஷ்ணருக்கு அதிகாலையில் அவரின் உஷ்ணத்தைக் குறைக்க அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலை துவட்டப்படுகிறது. அவர் பசியாக இருப்பார் என்பதால், உடனே நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பின்னர் தான் அவரின் உடல் உலர்த்தப்படும்.

இங்கு ஒவ்வோர் ஆண்டும் கிருஷ்ண ஜயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அமைவிடம்: கேரளத்தின் கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT