இயேசு ஒருமுறை கேப்பர்நவூம் என்ற நகருக்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஜனங்கள் வாசலுக்கு முன்னே திரண்டனர். நிற்க இடமில்லாத அளவுக்கு அநேகர் கூடிவந்தார்கள். இயேசு அவர்களுக்கு வசனத்தைப் போதித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது நான்கு பேர் சேர்ந்து, ஒரு முடக்குவாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள். ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் செல்ல முடியாததால், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, அந்த முடக்குவாதக்காரன் கிடக்கிற படுக்கையை கீழே இறக்கினார்கள்.
இயேசு அவர்களின் விசுவாசத்தைக் கண்டார். பின்பு, முடக்குவாதக்காரனை நோக்கி ""மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது'' என்றார்.
அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர் "இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்?' என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்தார். அவர்களை நோக்கி "நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்!'' என்று சொன்னார். பிறகு, முடக்குவாதக்காரனை நோக்கி, ""நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன்!'' என்றார்.
உடனே, அப்படியே அவன் எழுந்து, தன் படுக்கையை சுருட்டிக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றான்.
அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு "இதுவரை நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லை'' என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள் (மாற்கு 2:1}12).
இயேசு செய்யும் ஒவ்வோர் அற்புதத்திலும் ஓர் ஆழமான செய்தி இருக்கும். ஒரு நன்மை இருக்கும். இந்தச் சம்பவத்தில், முடக்குவாதக்காரனை சுமந்து வந்தவர்களின் விசுவாசத்தைப் பார்த்து வியந்து இயேசு சுகப்படுத்தினார். இயேசுவை விசுவாசித்தால், அவர் நமக்கு நன்மை செய்வார்.
இயேசுவின் ஊழியப்பாதையில் உற்றுநோக்கினால், ஒவ்வொரு அற்புதத்தின் முடிவிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதைக் காணலாம். தேவனுடைய மகத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும், மக்கள் அவரிடத்தில் விசுவாசம் கொள்ளவும், அதனால் தேவ ஒத்தாசையோடு பரிசுத்த வாழ்வு வாழவும், நித்திய ஜீவப் பாதையில் நடக்கவும் ஏதுவாகவே அற்புதங்களை தேவன் நிகழ்த்தினார்; தற்போதும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நமது வாழ்விலும் அவர் அற்புதங்களைச் செய்வார்.