தங்கள் ஜாதகத்தில் சனி பகவான் வலுத்திருப்பவர்கள் பொதுவாகவே சராசரிக்கும் சற்று அதிகமான ஆயுளைப் பெற்று விடுகிறார்கள். அதாவது 72 வயது வரை என்று கூறலாம். சனி பகவான் அதிபலம் பெற்றிருப்பவர்கள் அதாவது சுப கிரகங்களின் பார்வை சேர்க்கையானால், குறிப்பாக குரு பகவானின் சம்பந்தம் ஏற்பட்டால் 82 வயதுக்கு மேல் ஆயுள் என்றும் கூறலாம்.
சனி பகவான் வலுத்தவர்கள் உழைப்புக்கு அஞ்சக்கூடாது. இத்தகையோருக்கு பொதுவாகவே வலுவான எலும்புகள் அமையும்.
உழைக்கும் பாட்டாளி மக்களின் முதுகு வெயிலில் அதிகம் படுவதால், உடலுக்குத் தேவையான "வைட்டமின் டி' அதிகம் உற்பத்தியாகிறது. இதனை மருத்துவத்துறையும் ஏற்றுக்கொள்கிறது.
பொதுவாக, கும்ப ராசிக்கு சனி பகவான் விரயாதிபதியாகவும் ஆவதால், அசையாச் சொத்துக்களான வீடு வாசல், நில புலன்கள் அனைத்தும் வாழ்க்கை துணையின் பெயரில் இருப்பதே நல்லது. இல்லையேல்
"பணம் வந்தது தெரியும், போனது எப்படி போயிற்று?' என்பது தெரியாது. வியாபாரம் அல்லது தொழில் வேண்டுமானால் சொந்தப் பெயரில் நடத்தலாம். இத்தகையோருக்கு சுக்கிர மஹா தசை 30 வயதுக்கு மேல் வந்தால் "பிரபல்ய யோகம்' ஏற்படுகிறது.
இளமையில் வரும் சுக்கிர தசை பெரும்பாலான பலன்களைக் கொடுப்பதில்லை. அதோடு சுக்கிர பகவானுக்கு சனிபகவான் எட்டில் இருந்தால் சனி புக்தி வேலை செய்வதில்லை. ஆனால் கடைசி புக்தியான கேது புக்தியில் ஒரு சிறப்பான அஸ்திவாரத்தைப் போட்டு விடுவார்.
சனி பகவானின் அருளைப் பெறவேண்டுமாயின், ஏழை பணத்தை தானம் செய்வதும், பணக்காரன் உடலை வருத்தி ஆலயங்களைச் சுற்றி வருவதும் பரிகாரமாகும். அதாவது "தங்களுக்கு அரிது என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை அர்ப்பணிக்க வேண்டும்' என்பது பொருள்.