சம்சாரம் என்ற அடர்ந்த பயங்கரமான காட்டில் நான் திரிந்துகொண்டிருக்கிறேன். இங்கு என்னைக் காமம் என்கிற பயங்கர மிருகராஜாவான சிங்கம் துன்புறுத்துகிறது; பொறாமை என்ற வெயில் கஷ்டப்படுத்துகிறது. இவ்வாறு தவிக்கும் என்னை ஹே லட்சுமிநரசிம்மா! கைகொடுத்துத் தூக்கிக் காப்பாற்றுவாயாக.
-ஸ்ரீ லட்சுமிந்ரஸிம்ஹ ஸ்தோத்திரம்
கிழக்குத் திசையில் ஸ்ரீ ஹனுமானும், மேற்குத் திசையில் வாயுவின் மைந்தனும், தெற்குத் திசையில் அரக்கர்களை அழித்தவனும், வடக்குத் திசையில் கடலைத் தாண்டியவனும் என்னைக் காப்பாற்றட்டும்.
-ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்
ஒருவனுக்கு ஆத்மார்த்தமான பரிசுத்தம் ஏற்பட வேண்டும். அது ஏற்படாத நிலையில் அவன் ஆடம்பரமாக எவ்வளவுதான் பூஜை, புனஸ்காரங்கள் செய்து வந்தாலும் அவனுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.
-யோகி வேமன்னா
சாஸ்திரங்கள் எல்லையற்றவை, இவற்றில் நாம் அறிய வேண்டியவை அதிகம், நமக்கு இருக்கும் காலம் குறைவு, இடையூறுகள் பல. இந்த நிலையில் எது முக்கியமாக இருக்கிறதோ, அதை நீர் கலந்த பாலிலிருந்து பாலை மட்டும் கிரகிப்பதுபோல் ஒருவன் நாடியடைய வேண்டும்.
-விவேகசூடாமணி
தூயமெய்யுணர்வு வடிவமானவரும், ஒளிவடிவமானவரும், ஸ்படிகம் போன்று தூய்மையானவரும், எல்லா அறிவுக்கும் ஆதாரமானவரும் ஆகிய ஹயக்ரீவரை நான் வணங்குகிறேன்.
-ஒரு சம்ஸ்கிருத சுலோகம்