தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை உண்ண தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியைத் தீர்த்துவைக்க ஸ்ரீ மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களை தன் அழகால் வசியப்படுத்தி, அமுதத்தை தேவர்களுக்கு பெரும்பகுதியை வழங்கிக் கொண்டிருந்தபோது, ஸ்வர்பானு என்கிற அசுரன் தனக்கு அமுதம் கிடைக்காது என்று உணர்ந்து சூரியன் - சந்திரன் இருவருக்குமிடையே தேவர் ரூபமெடுத்து அமுதத்தை வாங்கி உண்டார்.
இதை சூரிய சந்திரர்கள் ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் எடுத்துச் சொன்னார்கள். ஸ்ரீ விஷ்ணு பகவான் தன் கையிலிருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதனால் தலை முதல் மார்புவரை கழன்று தனியாக உருண்டது. உடல் தனியாக வேறு இடத்தில் விழுந்தது.
அமுதம் உண்டதால் தலை பாகமும், உடல்பாகமும் உயிரோடு இருந்தன. தலை பாகத்தை பை டிஸைன் என்கிற மன்னன் எடுத்து வளர்த்து, ராகு தன் கடும் தவத்தால் பாம்பு உடலைப் பெற்று கிரக அந்தஸ்தும் பெற்றார்.
தனியாக விழுந்து கிடந்த உடல் பாகத்தை மினி என்ற என்கிற அந்தணர் வளர்த்து, கேது ஞான மார்க்கங்களை அவரிடம் கற்று, ஸ்ரீ விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் செய்து பாம்பு தலையைப் பெற்று கிரக பதவியை அடைந்தார்.
ராகு பகவானுக்கு வாயில் விஷம் இல்லை; கேது பகவானுக்கு வாலில் விஷம் இல்லை...
விலோம காலசர்ப்ப யோகம் - முன்னால் கேது, பின்னால் ராகு: கிரகங்கள் கேது பகவானின் வாயை நோக்கிப் பயணப்படுகின்றன. கேது பகவானின் வாயிலிருந்து வெளிப்படும் விஷத்தால் தாக்கப்படுகின்றன. பின்பக்கம் ராகுபகவான் தன் வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக்கொண்டு விலகிச் செல்வதால் அதிலிருந்து வெளிப்படும் விஷத்தாலும் தாக்கப்படுகின்றன. இதுதான் காலசர்ப்ப தோஷமாகும். இதை "அனந்த கால சர்ப்ப யோகம்' என்பார்கள்.
அனுலோம காலசர்ப்ப யோகம் - முன்னால் ராகு, பின்னால் கேது: கிரகங்கள் ராகு பகவானின் வாயை நோக்கிப் பயணப்படுகின்றன. கேது தன் வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு செல்கிறது. ராகு பகவானுக்கு வாயில் விஷம் இல்லை; கேது பகவானுக்கு வாலில் விஷமில்லை. இதனால் அதிக பாதிப்பு இல்லை. இதுதான் காலசர்ப்ப யோகமாகும். இதனை "சயன காலசர்ப்ப யோகம்' என்பார்கள்.