சூரிய பகவான் - ஆத்ம, பித்ரு (தந்தை) காரகர்.
சந்திர பகவான் - மனோ, தனு (உடல்), மாத்ரு (தாய்) காரகர்.
செவ்வாய் பகவான் - பூமி, சகோதர காரகர். மூன்றாம் வீடு இளைய சகோதரம். பதினொன்றாம் வீடு மூத்த சகோதரம்.
புத பகவான் - கல்வி, மாதுல (மாமன்), மணி, மந்திர, ஒளஷத (மருந்து) காரகர்.
குரு பகவான் - தனம், புத்திர காரகர்.
சுக்கிர பகவான் - களத்திர (வாழ்க்கைத் துணை), வண்டி, வாகனம், வீடு காரகர்.
சனி பகவான் - ஆயுள் காரகர்.
ராகு பகவான் - பயண, போக காரகர்.
கேது பகவான் - ஞானகாரகர்.
கஜகேசரி யோகம்
குருபகவான் நின்ற ஸ்தானத்திற்கு 1, 4, 7, 10 என்ற அமைப்பில் சந்திர பகவான் இடம் பெற்றிருந்தால் அது "கஜகேசரி யோகம்' என்று சொல்லப்படுகிறது. இதற்கான பலன் என்னவென்றால் அந்த ஜாதகத்தில் உள்ள எப்படிப்பட்ட தோஷமும் ஒரு சிங்கத்தைக் கண்டு பல யானைகள் பயந்து ஓடுவதைப் போல் ஓடி விலகிவிடும் என்பது ஜோதிட விதி.
குரு, சந்திர பகவான்கள் கூடியிருந்தால் அதுவும்கூட "கஜகேசரி யோகம்' என்ற அமைப்பைப் பெற்றிருந்தாலும் அது "குருச் சந்திர யோகம்' என்ற அமைப்பையும் உடையதாகும்.
குருச் சந்திர யோகம் உடைய ஜாதகர்களுக்கு, தங்களுக்கு விருப்பமான துறையில் வேலை வாய்ப்பும், உத்தியோகமும் கிடைக்காது. கிடைக்கும் வேலைவாய்ப்பும் விரும்பத்தகாத துறையுடன் கூடியதாகவே இருக்கும். இருந்தாலும் இதிலும்கூட போதுமான வருவாயும், பதவி உயர்வும், புகழும், பாராட்டும் கிடைக்கும்.
இதில் இரண்டு, மூன்று ஆண்டுகள் வரையில் "ஓஹோ'வென்று பிரபலம் அடைவார். அதையடுத்து இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு அந்த ஜாதகருக்கு இருண்ட சூழ்நிலை ஏற்பட்டு, அவர் புகழின்றி வாழ்ந்து வருவார். இப்படி ஒளியும் இருளும் மாறி மாறி வட்டமடிக்கக்கூடிய வாழ்க்கையாகவே அமையும்