ஒன்றால் சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்,
அன்றைப் பகலேயும் வாழ்கலார் } நின்றது,
சென்றது, பேரா தவர். (பாடல்: 297)
என்னிடம் உள்ள பொருள் ஒன்றே ஒன்றுதான் என்றும், அதுவும் சிறிய அளவினது என்றும் செயலை முடிக்கப் போதாது என்றும் ஒருவன் சோம்பி இருப்பானேயானால் அதனால் அவனுக்கு ஏற்படும் இழப்பு மிகப் பெரியதாகும். தம்மிடம் உள்ள பொருளை மற்றவர்க்குத் தந்தும், மற்றவர்க்கு வழங்கிய பொருளைவிட மீண்டும் சம்பாதித்தும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளாதவர், ஒரு முழுநாள் அல்ல ஒரு பகல் பொழுதிலேயே வாழ்வை இழந்துவிடுவர்.