மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை
ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை,
நாய்காணின் கற்காணா வாறு. (பாடல்-261)
தாம் இறப்பதற்கு முன்பாகவே, பல நல்ல செயல்களை (அறம்) எவ்விதமானதோர் ஆராய்ச்சியும் செய்து காலங்கடத்தாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள், தமக்கு மரணம் நெருங்கியதெனக் காட்டும் நோய்வந்த காலத்திலே, பின்னைச் செல்லும் வழிக்கு உறுதியானவற்றைச் செய்ய நினைந்தாலும், அவர் கருத்துப்படி அறம் செய்பவரைக் காண இயலாமற் போவார்கள். "நாயைக் கண்டால் கல்லைக் காணாதவாறு' போன்றதே அவர் நிலையும் எனலாம்.