மேல்நிலை அடைதல்
மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீண்டதற்குத்
தக்கது அறியார் தலைசிறத்தல் - எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப! "அகலுள் நீராலே
துடும்பல் எறிந்து விடல்' (பாடல்-202)
மணல் மேடுகளில் விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டுக்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்தால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல்நிலை அடைதல் என்பது "அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை ஆவேன்' என்பதுபோல, அது ஒருபோதும் நடக்காத செயல். "அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி.