மதுரையைச் சார்ந்த சொக்கநாதப் புலவர் திருமலை நாயக்கர் காலத்தவர். அவர் ஒரு முறை திருக்களந்தை ஊரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானை தரிசித்தார். கருவறை மூர்த்தியிடம் நெஞ்சம் பறிகொடுத்தார்.
"மாதொரு பாகனே! நிரந்தரமாக என் நெஞ்சையே கோயிலாகக்கொண்டு தாங்கள் எழுந்தருள வேண்டும். எளியேனின் இவ்வேண்டுகோளை ஏற்றிடுக!' என மனம் உருகி, குழைந்து வேண்டினார்.
புலவரை சோதிக்கவும், அவர் புலமையை நுகரவும் விரும்பிய அம்பலவாணர், "புலவரே, களந்தைக் கோயிலில் நான் இருந்தாக வேண்டும். காணவரும் பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரவும் வேண்டும். இவ்வாறிருக்க, இரு இடங்களில் ஒருவர் இருப்பது எவ்வாறு இயலும்?' என்றார்.
சற்றே சிந்தித்த புலவர், "இக் களந்தைக் கோயிலின் கருவறையிலும் தாங்கள் இருக்க முடியும்; அதே சமயம் நிரந்தரமாக என் உள்ளத்திலும் நீங்காது தாங்கள் நிலவ முடியும். அதற்கான வழியைச் சொல்கிறேன், கேட்டருள்க!
அம்பிகைக்கு ஒரு பாதி மேனியில் தந்து அர்த்தநாரீஸ்வரராக இடபாகத்தில் உமையும், வல பாகத்தில் தாங்களுமாக எப்போதும் போல் இக்கோயிலில் காட்சி அளியுங்கள். பார்வதியின் வலது பக்கமும், உங்களின் இடது பக்கமும் சேர்ந்தால் இன்னொருவர் உருவாகலாமே! அத்தகைய தோற்றத்தில் அடியேன் நெஞ்சில் எழுந்தருள தடை என்ன இருக்கிறது?' என்றார். சொக்கநாதப் புலவரின் சொக்கவைக்கும் இத் தமிழ்ப் பாடலைக் கேட்டு சொக்கநாதர் சிந்தை களித்தார்.
ஆகத்திலே ஒருபாதிஎன் அம்மைக்கு
அளித்து, அவள் தன்
பாகத்திலே ஒன்று கொண்டாய் -அவள்
மற்றைப் பாதியும் உன்
தேகத்திலே பாதியும் சேர்ந்தால்
இருவர் உண்டே சிவனே!
ஏகத்து இராமல் இருப்பாய்
களந்தையும், என் நெஞ்சும்!
-திருப்புகழ் மதிவண்ணன்