முல்லை நிலத்திற்குரிய முசுண்டைப் பூவைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் உள்ளன. இது தாவர வகையைச் சேர்ந்தது. மாலையில் பூப்பது. குழையமன் முசுண்டை, குவையிலை முசுண்டை, கரிமுகிழ் முசுண்டை, புன்கொடி முசுண்டை எனப் புலவர்கள் பாடியுள்ளனர்.
வெண்ணிறப் பூக்களுள் முசுண்டை சிறந்தது. ""வெள்ளியன்ன ஒள்வீ'' (மதுரைக் காஞ்சி-281) என்றும், ""வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை'' (மலைபடு-100) என்றும் பாடப்பட்டுள்ளன. மேலும், மேகமில்லாத வானத்தில் தோன்றும் விண்மீன்கள்போலத் தோன்றும் என்பர். இது பீர்க்கையோடும், முல்லையோடும் மலர்ந்து கிடந்தது என்கின்றன நெடுநல்வாடையும்(13), மதுரைக் காஞ்சியும் (281). வீட்டு முற்றத்தில் முசுண்டை படர்ந்து கிடந்ததாகப் புறநானூறு (320) குறிப்பிடுகிறது.
முசுண்டையை "முசுட்டை' என்றும் சொல்வர். முசுண்டையைக் கறியாக்கிச் (பொரியல்) சாப்பிட்டால் கெட்டநீர், சொறி சிறங்கு, மலக்கட்டு, வாதம், முதலியன நீங்கும் என வைத்திய மூலிகை அகராதி கூறுகிறது. மேலும்,
"மாதே முசுட்டையது வாதமொ டையத்தைத்
தீதே புரிநீரைத் தீர்க்குங்காண் - வேதனை செய்
வன்மலத் தைத்தள்ளும் வறட்சி சொறிசிறங்கைச்
சன்மமறப் போக்குநிசந் தான்'
என்று "பதார்த்தகுண சிந்தாமணி' எனும் மருத்துவ நூல் முசுண்டையின் மருத்துவப் பயனை எடுத்துரைக்கிறது.