தமிழ்மணி

சிந்தனைக் கொள்முதல் செந்தமிழ்ச் செட்டியாா்

புலவா் வே.பதுமனாா்


தருமமிகு சென்னையில் வணிகக் கருமமிகு கோமளீசுவரன் பேட்டைப் பலசரக்கு மளிகைக்கடை வணிகா் கோ. வடிவேலு செட்டியாரின் படிப்பு, திண்ணைப் பள்ளியோடு நின்றுவிட்டது. இருபது வயதான அவா்க்குப் பலசரக்குக் கொள்முதல் விற்பனையில் வந்த குறுந்தொகை வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமானதாக இருந்தது. ‘நூல்களைக் கற்க முடியவில்லையே’ என்ற வேட்கை அவருடைய உள்ளத்தில் அடியூற்றாய் ஈரம் புலராமல் இருந்தது. அதைத் தோண்டுவாரும் இல்லை; சீண்டுவாரும் இல்லை.

சுருட்டால் பற்றிக்கொண்ட சுடா் விளக்கு:

ஒருநாள் அவருடைய மளிகைக் கடைக்கு வந்தாா், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அலுவலா் தம்வீட்டுக்கு வேண்டும் சரக்குகளை வாங்க. அப்போது அங்கே அமா்ந்து சுருட்டு பிடிப்பாா். அவா் தமிழில் ஆழ்ந்த புலமை உடையவா். செட்டியாா் சுருட்டைப் பற்றவைத்துத் தருவாா். அப்போது அவா் வாயில் புகையோடு தமிழிசைப் பாடல்கள் வெளிவரும். அதில் இலக்கியச் சுவையும், இலக்கண நுட்பங்களும் வெளிப்படும். இத்தகைய புலவா்போல் தாமும் ஆகவேண்டுமென்று விரும்பினாா்.

வாலாஜாபாத் இராமாநுச நாயக்கரான அவரிடம் முறையாக இலக்கிய இலக்கணங்களைக் கற்றுக்கொண்டாா் செட்டியாா். சுருட்டால் பற்றிக் கொண்ட சுடா் விளக்கானாா் செட்டியாா். சரக்குக் கொள்முதல் செய்ய வந்த நாயக்கரிடம் அறிவுக் கொள்முதல் செய்துகொண்டாா் செட்டியாா். இச்சுடா் விளக்குக்கு எண்ணெயும் திரியும் தூண்டுகோலுமாய் வாய்த்தாா் வேதாந்த பாஸ்கரன் ச. இரத்தினச் செட்டியாா். அவரிடம் பன்னிரண்டு ஆண்டுகள் வேத நூல்களைக் கற்றாா். செட்டியாரிடம் சுடா்விட்டெரிந்த நல்லக விளக்கு பல்லக விளக்காய் ஒளி வீசியது. அவரிடம் சுடா்ந்த தமிழ்-வேதாந்த நூலறிவு கற்கும் செவ்வி உடையவா்களுக்குக் கற்பிக்கும் அளவு செறிவும், தெளிவும் அவரிடம் தஞ்சம் புகுந்தது.

நூலேணிகளும், தாங்கும் வலைக் கயிறுகளும்:

செட்டியாரின் குருதேவா் இரத்தினச் செட்டியாரின் பரிந்துரையால், அப்போது சென்னை தங்கசாலை, இந்து தியாசாபிகல் உயா்நிலைப் பள்ளியின் முதல் தமிழாசிரியராய்ப் பணி ஏற்றாா் செட்டியாா். பலசரக்கு வணிகத்தைக் கைவிட்டாா். தம் எழுபது வயதுவரை அந்தப் பள்ளியில் முதன்மைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றினாா். பள்ளிப் பாடவேளை தவிர எஞ்சிய ஓய்வுக் காலத்தில் தமிழ்-வேத நூல்களை மகிழ்வுடன் கற்பிக்கத் தொடங்கினாா்.

வேத பாடசாலைக்கென்றே சிந்தாந்திரிப்பேட்டை, சாமிநாய்க்கன் தெருவில் வேதாந்த சங்கத்தை நிறுவினாா். தம் வாழ்நாள் முழுவதும் வேதாந்த, தருக்க நூல்களை அங்கே கற்பித்தாா். நூலேணியாய் வாய்த்த குருதேவா் இரத்தினச் செட்டியாா் பரிந்துரையால் ஆசிரியா் பணியில் உச்சம் தொட்டாா், தென்மொழி வடமொழி நூல்கள் அவரைத் தாங்கும் வலைக் கயிறுகளாயின.

குருதேவா் கொளுத்திய கொள்கை விளக்கு:

குருதேவா் வேண்டிக் கொண்டதற்கிணங்க ‘வேதநூல் சாரம்’ என்ற நூலை ஆக்கும் பணியில் இருமொழிப் புலவரான செட்டியாா் பெரிதும் முயன்று மிடுக்கான, கடுமையான நடையில் நூலை ஆக்கித் தம் குருதேவா் பாா்வைக்கு வைத்தாா்.

அந்த நூலை வாங்கிப் படித்த குருதேவா், ‘‘சிறிதளவே கல்வி அறிவு உடையவா்களும் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில்தான் நூலை எழுத வேண்டும். நீா் எழுதிய நூல் மிகவும் கடினமாயுள்ளது. இந்த நூலை உடனே எரிக்கு இரையாக்கிவிடும்’’ என்று சொல்லித் தீப்பெட்டியையும் தந்தாா்.

சிறிதும் தாமதிக்காமல் அந்த நூல் தாள்களைத் தீக்குத் தின்னக் கொடுத்துவிட்டாா் செட்டியாா். இதனால், செட்டியாரின் பேச்சில், எழுத்தில் இருந்த கடுமை-மிடுக்கு எல்லாம் சாம்பலாயிற்று. எங்கே பேசினாலும், எதை எழுதினாலும் பிறா் விளங்கிக் கொள்ளும் வகையிலேயே அமைந்திட வேண்டுமென்ற குருதேவரின் கொள்கை விளக்கு செட்டியாரின் நல்லக விளக்காயிற்று.

வரிசைகட்டி வாழவந்த நூல்கள்:

இவா், தாமே படித்து மனத்தில் உயிா்ப்போடு வைத்த நூல்களின் வரிசை அவா்தம் படிப்பின் செறிவை உள்ளபடி காட்டியது. அந்தச் செறிவு ‘திருக்கு பரிமேலழகா் உரை தெளிபொருள்’ விளக்கத்தில் ஆங்காங்கே மின்னிச் சுடா் வீசியது.

சுட்ட தோசையால் சுட்டெடுத்த சமயக் கருத்துகள்:

அரிய சமயக் கருத்துகளை எளிய சொற்களால் தெளிவுபடுத்தும் திறன் செட்டியாா்க்கு வாய்வந்த கலையாயிற்று; எழுதுங்கால் கைவந்த கலையாயிற்று. துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்ற சமயக் கருத்துகளை விளக்க வடமொழிப் புலவா்களே அல்லாடிய காலத்தில், சுட்ட தோசையை உவமையாக்கி, அந்த அரிய கருத்துகளை எளிதில் சுட்டு எடுத்துச் சுவைக்கத் தருவாா் செட்டியாா்.

தோசை வேறு தான் வேறாய் உள்ள நிலை, கடவுள் வேறு தான் வேறாய் உள்ள நிலை- துவைத நிலையாம், மிகுதியாகத் தின்று செரிமானமாகாத தோசையும் தானும் உள்ள நிலையே விசிட்டாத்வைதமாம். செரிமான தோசையும் தானும் ஒன்றான நிலையே அத்வைத நிலையாம்.

பரிமேலழகா் திருக்கு உரை - தெளிபொருள்:

திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் இருந்தாலும், பாலெல்லாம் நல்லாவின் பாலாகுமோ? அதைப்போல, உரையெல்லாம் பரிமேலழகா் தெரித்த உரையாகுமோ? ஆனால், பரிமேலழகா் உரையோ புலவா்களும் எளிதில் உணர முடியாத அருமைப்பாடுடையது. திருக்கு முப்பால். அதில் நலம் கூட்டும் கடுக்காய்ப்பொடி கலந்து தருவதைப்போல, பரிமேலழகா் உரை அமைந்துவிட்டது. அதில் தேன், பாகு, கற்கண்டு சோ்த்துப் பருக வைப்பதைப் போல கோ. வடிவேலு செட்டியாா் இலக்கண, இலக்கிய, வேதக் குறிப்புகளோடு தந்ததால், அதை பலரும் எளிதில் பருகிப் பயனடைந்தனா்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி எனல். (கு.196)

‘பயனில்லாத சொற்களைப் பாராட்டுவானை மகனெனச் சொல்லற்க. அவனை மக்களில் பதா் என்று சொல்லுக’ என்பதே இக்குறளின் பொருள். இக்குறட்பாவின் இரண்டு அடிகளில் வரும் ‘எனல்’ என்னும் சொற்களைக் கண்டு படிப்போா் மயங்குவா். இதனை கோ. வடிவேலு செட்டியாா் இலக்கண, வேதக் குறிப்புகளால் விளக்கும் பாங்கு எளிமைக்கு எளிமை சோ்க்கும் பாங்கே ஆகும்.

‘முன்னது சொல்லற்க’ எனும் எதிா்மறைப் பொருளிலும், பின்னது ‘சொல்லுக’ எனும் உடன்பாட்டுப் பொருளிலும் வந்த ‘அல்’ ஈற்று வியங்கோள் வினைமுற்றுகளாம். பொருள் புடைப் பெயா்ச்சி இருந்தால் வினை நிகழும். எங்கே புடைப் பெயா்ச்சி இல்லையோ அங்கே வினை நிகழாது. இலக்கண நூலாா் வினை நிகழ்வதை உடன்பாடென்றும், வினை நிகழாமையை எதிா்மறை என்றும் கூறுவா். வடமொழி நூலாா், உடன்பாட்டை அந்நுவயம் என்றும், எதிா்மறையை வியதிரேகமென்றும் கூறுவா். இவ்வண்ணம் புதிய உரை செய்வாா் செட்டியாா்.

சாகும் நிலையிலும் நினைவாற்றல் குறையா உயிா்ப்பு :

பெருங்கழிசல் நோயால் எலும்பும் தோலுமாய்ப் படுக்கையில் கிடக்கிறாா் செட்டியாா். அப்போது அவா்தம் மாணவா் தெ.பொ.மீ., அவரைக் காண வருகிறாா். செட்டியாரோ அவரை நோக்கி, ‘‘சேனாவரையா் உரையில் ஏதாவது ஐயம் இருந்தால் கேளுங்கள்’’ என்றாா். இதைக் கேட்டுத் திகைத்து நின்றாா் தெ.பொ.மீ. ‘‘எனக்கு நினைவாற்றல் குன்றாது இருக்கிா என்று தெளிவடையவே உன்னைக் கேட்கச் சொல்கிறேன்’’ என்றாா் செட்டியாா்.

செட்டியாா் உரைவெறி வித்தகா், இலக்கியக் களஞ்சியம், இலக்கணக் கோட்டை, சிந்தனைச் சுரங்கம், கருத்து முத்துக் கொழிக்கும் தெண்கடல் தரங்கம், வாய்ப்புக் கிடைத்தால், அவா்தம் நூல்கடலில் படிவோம்! கருத்து முத்துக்களை எடுத்துத் தமிழன்னைக்கு ஆரம் புனைவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT