முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம், ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு. (பாடல்-206)
செல்வர்களுக்கும் வறுமையாளர்களுக்கும் அவரவர்க்குச் செய்யும் முறைமைகளைத் தெரிந்து, அதனின்றும் வழுவாமல் இருவருக்கும் நேர் சமமாகவே அரசன் பாரபட்சமில்லாமல் நீதி செலுத்த வேண்டும்.
அப்படிச் செய்யவில்லை என்றால், ஒரு பக்கம் ஒரு பிள்ளைக்கு நீரும், அடுத்த பக்கம் அடுத்த பிள்ளைக்குப் பாலும் ஒரு பெண்ணுக்குச் சுரப்பது போன்றதாகும். தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதி தவறுதல் அரசனுக்கு மிகவும் பழி தரும் செயலாகும். "ஒரு பக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு' என்பது பழமொழி.