அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன். (பாடல்-212)
மடமாகிய பண்பைக் கொண்டவளும் சாயலிலே மயிலைப் போன்றவளுமான பெண்ணே! அறிவாற் சிறந்த சான்றோர், கடன் வாங்கியாவது தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்வர். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து வறுமை உடையவர்களாக இருத்தலால் ஒன்றைச் செய்ய இயலாத காலத்தும் "செய்யும் காலம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று கருதி இருக்க மாட்டார்கள்; அதை எப்படியும் செய்யவே முற்படுவார்கள். "கடங்கொண்டும் செய்வார் கடன்' என்பது பழமொழி.