கற்றதொன்று இன்றி விடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப இளையானே யாயினும்
மூத்தானே யாடு மகன் (பாடல்-186)
வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல்நீர்ப் பெருக்கை உடைய சேர்ப்பனே, தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்து விடுகின்றவன் அறிவுடையவனே ஆவான். அவ்வாறு செயலைச் செய்து முடிப்பவன், செயலில் இளையவனே ஆனாலும், அவனை அறிவினால் முதிர்ந்தவன் என்றே கொள்ள வேண்டும். தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும். "இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன்' என்பது பழமொழி.