பழமொழி நானூறு
பண்பு உகுத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றுஒறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குளாய்!
ஏவலாள் ஊருஞ் சுடும். (பாடல்-191)
மின்னலைப்போல விளங்கும் நுண்மையான இடையினை உடையவளே! ஒருவனால், ஏவிவிடப்பட்ட ஏவலாளன் ஓர் ஊரையும்கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதற்கு அவனை நோவதனால் ஒரு பயனும் இல்லை. அதுபோலவே "முற்பிறவியிலேயே யாம் ஆத்திரம் கொண்டு செய்த பழைய வினைகள் தொடர்ந்து வந்து இன்று எம்மை வருத்துகின்றது' என்ற உண்மையைச் சிந்தித்து அறியாதவர்கள், தம்மை துன்பப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செயலாகக்கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ? "ஏவலாள் ஊருஞ் சுடும்' என்பது பழமொழி.