பழமொழி நானூறு
தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க - பரிவுஇல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க்கூட்டு வார். (பாடல்-135)
அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால், துன்புறாதவர்களைப்போல் பொறுத்திருக்க. (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை, (புகுவரேல்) பொது இடத்தைத் தாழ்இடுவாரோடு ஒப்பார். (க-து.) அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது. "அம்பலம் தாழ்க் கூட்டுவார்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.