அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார்
எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று
தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே
மகன்மறையாத் தாய்வாழு மாறு. (பாடல்-116)
போரிடை நின்று பகைவரைப் போர் செய்து நீக்கி மிகவும் எல்லோரானும் அறிந்துகொள்ளவும் பட்டார்கள்.
முற்காலத்தில் எம் முன்னோர் இத்தன்மையராயிருந்தனர். இவற்றை யாரிடத்துரைப்போம் என்று கூறாமற்கூறி, தம் முன்னோருடைய புகழ் மறைவினால் மறைந்து நின்று உணவு உண்டு செல்லுதலாகிய அது, தான் பெற்ற மகனால் தனது அமையா ஒழுக்கத்தை மறைத்துக் கற்பமையாதாள் கணவனோடு வாழுமாற்றை ஒக்கும். "மகன் மறையாத் தாய் வாழுமாறு' என்பது பழமொழி.