விடையின் வகைகளைப் பற்றித் தொல்காப்பியர் கூறாவிடினும் உரை எழுதிய இளம்பூரணர் உடன்படுதல், மறுத்தல் முதலான ஆறு வகைகளைத் தெரிவிக்கிறார். நன்னூல் விதி "விடை எட்டு வகைப்படும்' என்கிறது.
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப
(நன்னூல்-386)
சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல் விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, இனமொழி விடை ஆகிய எட்டு விடைகள். மறை என்பது மறுத்தல்; நேர் என்பது உடன்படுதல்; இரண்டும் எதிர்ச்சொற்கள். இவற்றை ஒன்று சேர்த்து "நேர்மறை' என்னும் சொற்றொடரைப் பலரும் எடுத்தாள்கின்றனர். இது பிழையாகும்.
""தம்பி, கடைக்குப் போவாயா?''
என்ற வினாவுக்குப் ""போவேன்'' என்பது நேர்;
""மாட்டேன்'' என்பது மறை. யாராவது இரண்டையும் சேர்த்துப் ""போவேன், மாட்டேன்'' என்று கூறுவாரா? "நெகட்டிவ் திங்ஸ்' என்பதை எதிர்மறைச் சிந்தனை எனல் சரி; பாசிட்டிவ் திங்ஸ் என்பதை உடன்பாட்டுச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை என்று சொல்லலாம். எனவே, "நேர்மறை' என்னும் சொற்றொடரை எடுத்தாள்வதை இனி தவிர்க்கலாமே!