அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
பாண்சேரிப் பற்கிளக்கும் ஆறு. (பாடல்-115)
கல்வி கேள்விகளில் விரிவு உடைய இயற்கை அறிவினார் இடையில், நுழைதற்குத் தகுதியற்ற கயவர்கள் புகுந்து தாமே மாறுபாட்டினால் வீணான பயனற்றவற்றைக் கூறுதல், பாணர்கள் தெருவில் ஒருவன் வாய்திறந்து பாடுவதைப்போல அஃது ஆகும் அல்லவா? (க-து.) கற்றாரிடைக் கல்லார் வீண் வார்த்தைகளை பேசாதொழிதல் வேண்டும். "பாண் சேரிப் பற்கிளக்கும் ஆறு' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.