செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து. (பா-90)
செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும், பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ளமுடையார்க்கும், மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல, அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம், ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.
"வெந்நீரில் தண்ணீர் தெளித்து' என்பது பழமொழி.