நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்
வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார மார்ப! குடிகெட வந்தால்
அடிகெட மன்றி விடல். (பா-103)
தனி வடமாகிய முத்து மாலையை உடையவனே! பொய் கூறினால் உளவாகும் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும், அந்நரக உலகத்தின்கண், எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங்குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான். ஆதலால், தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால் அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி, தங்குடிநோக்கி வேரறத் தண்டஞ் செய்துவிடுக.
"நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம் வரம்பில் பெரியானும் புக்கான்' என்பது பழமொழி.