வெற்றி முரசு கொட்டிடுவோம்
வீர வணக்கம் செய்திடுவோம்
எட்டுத் திசையும் கூடிடுவோம்
இந்தியத் தாயைப் போற்றிடுவோம்!
கட்டபொம்மன், ஜான்சி ராணி,
காந்தித் தாத்தா, நேதாஜி
பட்டேல், நேரு, சிதம்பரனார்
படங்கள் வைத்து வணங்கிடுவோம்!
பீரங்கிக் குண்டுக் கஞ்சாமல்
பெரிதாய் உயிரை எண்ணாமல்
தீரங் கொண்டு போரிட்ட
தியாகி களைநாம் வாழ்த்திடுவோம்!
பிச்சைக் காரர் இல்லாமல்
பிறரின் பொருளைத் திருடாமல்
கட்சிச் சண்டை காணாமல்
களித்து வாழ எண்ணிடுவோம்!
உலகில் அமைதி தோன்றிடவும்
உண்மை அன்பு பரவிடவும்
கலகக் காரர் திருந்திடவும்
கடவுள் அருளை வேண்டிடுவோம்!
(பூந்தோட்டம் கவிதைத் தொகுதியிலிருந்து...)