மாணவத் தம்பி தங்கைகளே
மாசறு தங்கக் கம்பிகளே
தேனினும் இனிய செய்திகளை
செவிகளைத் தந்தே கேளுங்கள்
கானகம் பறவைகள் விலங்குகளும்
கருத்தாய் இயற்கையைப் பேணிடுமே
ஆன மட்டும் அவையெல்லாம்
அடுத்தவைக் காகவும் வாழ்ந்திடுமே
நாட்டில் மூன்றில் ஒரு பங்கு
நல்ல வனங்களாய் இருக்கணுமே
காட்டு உயிர்கள் வனங்காக்கும்
கட்டுப் பாட்டுடன் தான்வாழும்
பழங்களைத் தின்றே கொட்டைகளை
பறவைகள் விதைத்தே வனம்பெருக்கும்
பழம்காய் விதைகள் கட்டைகளை
பலருக்கும் தரும் மரம் உதவிசெய்யும்
தா... வரங்கள் என்றாலே
தருமே வரங்கள் தாவரங்கள்
கானக மரங்கள் வாழ்வெல்லாம்
கனிவாய் மனிதர்க் குதவிடுமே
மனிதர்கள் இல்லை என்றாலும்
வனங்கள் தாவரம் இவைவாழும்
இனியநல் பறவைகள் விலங்குகளும்
இயற்கையில் இணைந்தே வாழ்ந்திடுமே
வனங்கள் இல்லா விட்டாலும்
விலங்குகள் பறவைகள் இலைஎனினும்
மனிதர்கள் வாழ்ந்திட முடியாதே
மனதில் சிந்தித்தே செயல்படுவோம்!