ஒரு மீனவன் ஆற்று நீரில் வலை வீசி மீன்களைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் மீன் பிடிப்பதை அருகிலிருந்த மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு குரங்கு பார்த்துக் கொண்டிருந்தது.
மதிய உணவு சாப்பிடுவதற்காக மீனவன் வலையை ஆற்றின் கரையில் வைத்து விட்டுச் சென்றான். குரங்கு மரத்திலிருந்து இறங்கி வந்தது. மீனவனுடை வலையைக் கையில் எடுத்துக் கொண்டது. தன்னையும் மீனவனாக எண்ணிக்கொண்டு அவனைப் போலவே வலையை ஆற்றில் வீசியெறிந்தது.
ஒரு பெரிய மீன் வலையில் சிக்கிக்கொண்டது! தப்பிக்கொள்ள நினைத்த அந்த பெரியமீன் வலையை வேகமாக இழுத்தது. குரங்கு வலையின் பிடியை விட்டிருக்கலாம்! ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. குரங்குப்பிடியாயிற்றே! அந்தப் பெரிய மீனும் விட்டபாடில்லை! வேகமாக இழுத்தது.
குரங்கு வேகமாகச் செல்லும் ஆற்று நீரில் விழுந்து விட்டது! மீன் தப்பித்துக் கொண்டது! ஆனால் ஆற்று நீர் வலையைப் பிடித்திருந்த குரங்கை அடித்துச் சென்றது. குரங்கு பயத்தில் அலறிக்கொண்டே ஆற்றோடு சென்றது. நல்ல காலம்! ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தில் கிளை தாழ்வாக அதற்குக் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தது. ஒரு வழியாக வலையை விட்டுவிட்டு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டது. அப்பாடி! தப்பித்தோம்! என்று பெருமூச்சு விட்டது. உடம்பை உதறிக்கொண்டது!.
நீதி: வேண்டாத வேலைகளில் ஈடுபட்டால் ஆபத்துதான்.